|
ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம் |
|
|
|
பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் இன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது.
பெண்பற்றிய சிந்தித்தல் , பெண் அடக்கு முறையின் வடிவங்கள் பெண்கள் உளஉடல் ரீதியான தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலுக்கான செயற்திட்டங்கள் வழிவகைகள் மேற்கொள்ளலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். இத்தகைய முன்னெடுப்புகளுக்கு முன்னின்று உழைத்தலும் உண்மையான பெண்ணின் விடியலில் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் உரிமையுமாகும். ஆனால் பெண்ணியம் என்ற சொல்லுக்குள் பெண்ணின் பிரச்சனைகள் சரியாக அணுகப்படுகிறதா ? அல்லது வெளிப்படுத்தப்படுகிறதா ? பெண்களுக்கான எத்தகைய விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என நோக்கினால் கிடைப்பது வெறுமையும் ,வெற்றுக் கோசங்களும் தான் மீதமாகிறது. ஆனால் பெண்ணியம் என்ற வார்த்தைக்குப் புதுப்புது வடிவங்கள் கொடுத்து அறிக்கைகள் , கண்டனங்கள் தீர்மானங்கள் அவ்வப்போது நிறைவேறுவதும் குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்குள் அவை போர்க்குரலாகவும் , போராயுதமாகவும் பெருமைப்படுத்தப்படுதலுடன் தீர்மானங்கள் , கண்டனங்களுடன் கடமைகளும் முடிந்து விடுகிறது. இத்தகைய பெண்விடுதலைப் பேச்சுக்குள்ளும் , பேசுவோருக்குள்ளும் ஒரு பக்க அரசியல் மோதலுக்கான உள்ளுடனே புதைந்து கிடக்கிறது. இந்தக் குழுமத்தின் குட்டையைக் கிழறிப் பார்த்து முகர்ந்து இவர்களே தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்வதும் தங்களுக்குள் கூப்பாடு போட்டுக் குழம்பி அடங்கிப்போய் விடுவதும் சற்றுக்காலம் கழித்து மீள எழுந்து அறிக்கைகள் , தீர்மானங்கள் , நிறைவேற்றல்கள் எழுதப்படுதலும் இவர்களுக்கு வளமையானதாகவே இருந்து வருகின்றது. பெண்ணியப் போர்வைக்குள் புலியெதிர்ப்புச் செய்து கொண்டிருக்கும் இவர்களது புலம்பல்களைத்தான் இவர்களது எழுத்துக்களும் சந்திப்புக்களும் இதுவரை செய்து முடித்தன. இவர்களது இத்தகைய புலியெதிர்ப்புப் பணியை யாரும் ஊடறுத்துப் பேசினால் அவர்களெல்லாம் பெண்ணின விடுதலையின் எதிரிகள் , அல்லது விடுதலைப் புலிகளின் அரசியலில் அழிந்து போனோர் என்றெல்லாம் இவர்களது போலிச்சாயப் பெண்ணியத்தை வெளிச்சொல்லும் பெண்களுக்கு இவர்கள் கொடுத்து விடும் பட்டங்கள் பெரியவை. இந்தப் போலிகளுடன் தங்களது எழுத்துக்களையும் தங்கள் பெயர்களையும் தக்க வைத்துக் கொள்ள சில பெண்ணியவாதிகளும் இவர்களின் பின்னின்று மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டியபடி பெண் அடக்குமுறை பற்றியும் ஆணாதிக்கம் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி தங்கள் தளம் மறந்து தடுமாறித் தொலைகிறாhர்கள். உலகத்துப் பெண்களுக்கு இவர்கள் குரல் ஓங்கும் ஆனால் எங்கள் பெண்களின் நொருங்கும் குரல்களுக்குத் தெம்பு கொடுக்கவோ தூக்கி நிமிர்த்தவோ இந்தப் பெண்ணியங்கள் எந்தவித பங்களிப்புச் செய்ய முன்வருவதுமில்லை. அதுபற்றி மூச்சும் விடுவதில்லை. எங்கே இவர்களுக்கான ஒரு துருப்புக் கிடைக்கிறதோ அந்த இளையில் ஏறிநின்று வீரம் பேசி விடுதலைக்குரல் ஒலிப்பதில் மட்டும் தவறிவிடமாட்டார்கள். யாருக்காகவோ எல்லாம் கண்டனங்கள் விடும் இவர்களுக்கு ஈழத்துப் பெண்ணை ஆக்கிரமிப்பாளன் வன்முறைக்கு உள்ளாக்குவதானது சும்மா கையில் தொடுவது போலிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த பெண்கள் சந்திப்பின் தலைவி இத்தகைய அர்த்தப்படலுடன் வரைந்திருந்த கட்டுரையும் அவர்சார்ந்த சிலரும் எழுதியிருந்த எழுத்துக்கள் ஊடாக இவர்களது பெண்விடுதலையானது புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பிட்ட இவர்களின் அரசியல் வக்கிரங்களை அவர்கள் சார்ந்த தனிப்பட்ட காரணங்களுக்கான பழிவாங்கலை மேற்கொள்ளும் வெளிப்பாடுகளும் அதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கும் ஊடகங்களும் இவர்களை வைத்துத் தமக்கான ஆதாயத்தையும் பிரச்சாரத்தையும் முடித்துக் கொள்கிறார்கள். இவர்களோ வெறும் பயன்படு கருவிகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்களது எதிர்ப்பு மொழிகூட இவர்களை இயக்கும் இயக்கிகளின் மொழியாகவும் இவர்கள் சார்ந்த ஆண்களின் அவர்களது அரசியல் பழியுணர்வாகவுமே வெளியாகின்றன. இவர்களது தனித்துவம் சுயம் என்பதெல்லாம் பாதிப்புக்கு உள்ளாவோரின் துயர்களை வைத்து சுயபிரபலமும் சுயபுராணமுமே தான். பெண்களுக்கான குரல்கள் என இவர்கள் விடுகின்ற கண்டனங்கள் கட்டுரைகளுக்குள்ளேயே இவர்களது வக்கிரங்களே வெளிப்படுவதைக் காண முடிகிறது. வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணை இந்த அறிவுசீவிகள் 40 தரம் வல்லுறவுக்கு உள்ளானார் 50 தரம் வல்லுறவுக்கு உள்ளானார் என எண்ணளவு கூறி பாதிப்புக்கு உள்ளான பெண்ணை பல்லாயிரம் தரம் வார்த்தைகளால் இவர்கள் வல்லுறவு புரிகிறார்கள். குறித்த சம்பவத்துக்குக் குஞ்சம் கட்டித் தேரிலேற்றி தெருவில் இறக்கி பாதிக்கப்படும் பெண்ணின் மனதையும் அவளது துயரையும் இவர்களது வக்கிரங்களுக்குப் பயனாக்கிக் கொள்வதுதான் இவர்களது அதி உயர் பெண்ணியமும் பெண்ணின விடுதலையும். குறித்த சம்பவங்களுக்கான தீர்வு அல்லது அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கான இவர்களது பங்களிப்பு என்பதும் இவர்களது கண்டனங்கள் என்ற பெயரில் விடப்படும் அறிக்கைகளும் தீர்வுகள் அல்லாது திரிமூட்டி எரியூட்டும் வக்கிரங்களாகி வெளிப்படுகிறது. தங்களுக்குள்ளே வட்டமிட்டு தங்களைத் தாங்களே புத்திஜீவிகள் என்றும் , தாங்களே தமிழ்ப் பெண்ணின விடுதலைக் குரல்கள் என்றும் , தமிழினப் பெண்ணின் விடுதலையின் ஆணிவேர்கள் , அரசியல் மேதாவிகள் என தங்கள் சார்ந்தவர்களின் பின்னியக்கிகளை குசிப்படுத்தக் கூடிப்பேசி பெண்களுக்கான சந்திப்பில் கூட அரசியல் பழிவாங்கலுக்கான அவசியமே அறிவுறுத்தப்படுதலும் பழிவாங்குவது எப்படியென்பதுமே இவர்களால் படிப்பிக்கப்படுகிறது. ஆயுதம் தருவார்கள் பின்னர்அதை வாங்கிவிட்டு அடுப்படி போவென்பார்கள் இதையெல்லாம் நாங்கள் நம்பவா ? இப்படியும் இவர்களுக்குள்ளிருந்து குரல்கள். இவர்களைப் பிடித்து யார் ஆயுதம் கொடுத்தார்கள் ? ஆடுகளம் என்றார்கள் ? தங்களைத் தாங்களே ஆயுதம் எடுத்தவர்களாகவும் போராடிக் களைத்தவர்களாகவும் சொல்லிக் கொள்ளவும் பெருமைப்படவும் , பெண்ணின் விடுதலையென்ற பெயருக்குள் பாலியல் சுதந்திரம் என பல உறவின் துணைதேடும் இவர்களது போலி விடுதலைக் குரல் எங்களுக்கு வேண்டாம். ஆண்பெண் உறவிற்கும் , பெண்விடுதலைக்கும் உள்ள வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள முடியாத இவர்களுக்கு இறுதியாக...... நீங்களெல்லாம் இங்கிருந்து பொழுது போக்கவும் உங்களைப் பிரபலமாக்கவும் மாக்சிசப் பெண்ணியம் , மண்ணாங்கட்டிப் பெண்ணியம் எனக்கனவு காண எங்கள் மண்ணிலோ உலகையே ஆச்சரியப்பட வைக்கும் அளவு பெண்ணின எழுச்சியும் மலர்ச்சியும் வெற்றி கண்டிருக்கிறது. அந்த வெற்றிக்குரியவர் வழிகாட்டலில் புலத்திலும் பெண்களின் விழிப்பு பெரும்பான்மையான அளவு பெருமாற்றம் கண்டுள்ளது. உங்கள் கனவுலக அரசியல் வக்கிரப் பெண்ணியம் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஈழத்துப் பெண்களின் உரிமை விட்டுவிடுங்கள் அவர்கள் அவர்களை வெல்வார்கள். - சாந்தி ரமேஷ் வவுனியன் -
|